Monday, 10 April 2017

ஜனநாயக செயல் கட்சியில் இனவாதம் மட்டுமே மேலோங்கியுள்ளது - ஜனநாயகம் கேள்விக்குறியாய் இருக்கிறது.
மலேசிய அரசியலில் அம்னோ தேசிய முன்னணிக்கு பெரும் சவால் மிக்க அரசியல் கட்சியாய் உருவெடுத்திருக்கும் ஜசெக எனப்படும் ஜனநாயக செயல் கட்சியில் ஜனநாயகம் எனும் சொல் மரணித்து போய் விட்டு இனவாதம் மட்டுமே அங்கே தலைத்தூக்கிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.அம்னோவை போலவே ஜசெகவும் இனவாதத்தின் உச்சமாகவே விளங்குகிறது என்றும் அக்கட்சியின் அடித்தட்டு உறுப்பினர்கள் முதற்கொண்டு அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் அஃது நீண்டக்கால உறுத்தலாகவே இருந்து வருகிறது.
ஜசெக கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அக்கட்சியில் இந்தியர்கள் என்பவர்கள் ஒரு கருவேப்பிலை போல் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை.ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றங்களுக்கு அக்கட்சியின் சார்பில் ஒதுக்கப்படும் தொகுதிகள் கூட இனவாத தன்மையோடும் கோட்டா முறையிலும் தான் உள்ளது.
பல்லினம் சார்ந்த கட்சி என கூறப்பட்டாலும் இங்கு ஒரு இனத்தின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கியுள்ளது.ம இ கா தேசிய முன்னணியில் அம்னோவின் அடிமையாய் இருப்பதாக சாடும் ஜசெக இந்திய அரசியல்வாதிகள் சொந்த கட்சியில் உரிமையை இழந்து ஒரு இனத்தின் ஆளுமையில் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை அவர்கள் மறந்து விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
மக்களுக்கு நன் சேவையும் அர்ப்பணிப்பும் செய்துக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கு அக்கட்சியில் மதிப்பும் மரியாதையும் இல்லை.மாறாய்,தலைமைத்துவத்திற்கு வால் பிடித்து கூஜா தூக்கும் அரசியல் பிழைப்புவாதிகளுக்கு மட்டுமே அக்கட்சியில் தொடர்ந்து வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
பல்லினம் கட்சி என மார்த்தாட்டிக் கொள்ளும் ஜசெகவில் எந்தவொரு மாநிலத்திலும் இந்தியர் ஒருவர் தலைவராக இதுவரை நியமிக்கப்பட வில்லை என்பது வேதனையான பதிவாக இருக்கும் பட்சத்தில் மாநில ரீதியிலான கட்சி தேர்தலில் முதன்மை நிலையில் இந்திய தலைவர்கள் வெற்றியை பதிவு செய்தாலும் அவர்களுக்கு துணைத்தலைவர்,உதவித் தலைவர் அல்லது துணை செயலாளர் போன்ற பதவிகளோடு இதர பதவிகள் மட்டுமே வழங்கப்படுகிறதே தவிர தலைவர் எனும் பதவி மட்டும் அவர்களுக்கு தொடர்ந்து அந்நியமாகியே வருகிறது.
ஜசெக கட்சியில் மாநில தலைவர்கள் பதவியெல்லாம் குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு போலவும் இந்தியர்களுக்கு அஃது எட்டாக் கனி போலவும்தான் உள்ளது.இந்தியர்களின் உரிமையை அம்னோவிடம் ம இ கா அடமானம் வைத்து விட்டது என பத்திரிக்கை அறிக்கை விடும் ஜசெக விளம்பர பிரியர் அரசியல்வாதிகள் கட்சிக்குள் ஒரு இனத்திடம் வாய் திறந்து உரிமைக்காக போராட முடியாமல் மண்டியிட்டுக் கிடப்பது பெரும் அவமானத்திற்குரியது.ம இ காவை வசைப்பாடும் ஜசெக இந்திய தலைவர்கள் நாற்காலிக்காகவும் பதவிக்காகவும் கட்சிக்குள் அடிமையாய் தான் இருக்கிறார்கள்.
அம்னோ தேசிய முன்னணியை இனவாதத்தோடு ஒப்பிடும் இவர்கள் சொந்தக்கட்சிகுள் இனவாதத்திற்கு அடிமைப்பட்டு கிடப்பது அவர்கள் இதுநாள் வரை ம இ காவிற்கு எதிராகவும் அம்னோவிற்கு எதிராகவும் முழங்கியதெல்லாம் வெறும் அரசியல் சுயநலம் மட்டுமே என சந்தேகிக்க செய்கிறது.
நாட்டின் 13வது பொது தேர்தலில் ஜசெகவில் ஒருவருக்கு ஒரு தொகுதி மட்டுமே என அன்றைய தலைவர் அமரர் கர்பால் சிங் அறிவித்த போது பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தனது நாடாளுமன்றத்தை காலி செய்து விட்டு வெறும் சட்டமன்றத்தில் மட்டுமே போட்டியிட்டார்.ஆனால்,பேராக் மாநிலத்தில் கர்பால் சிங்கின் கட்டளைக்கு பணியால் அன்றைய மாநில ஜசெக தலைவர் ங் கூ ஹாம் மற்றும் மாநில செயலாளர் ங கோர் மிங் ஆகிய இருவரும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் போட்டியிட்டனர்.அஃது அவர்களின் ஆளுமையா அல்லது இனவாத திமிரா என்பதை அக்கட்சியின் தலைமைத்துவம் விளக்குமா?
ஒவ்வொரு மாநிலத்திலும் கணிசமான இந்தியர்கள் ஜசெகவில் உறுப்பினர்களால் இருக்கும் நிலையிலும் பல்லின கட்சி என முழங்கும் ஜசெகவில் சம நிகராய் இந்தியர்களுக்கும் தொகுதி ஒதுக்காதது ஏன் எனும் கேள்விக்கு அதன் தலைமைத்துவமோ அல்லது அக்கட்சியில் நாற்காலி கிடைத்தால் மட்டும் போதும் என வாய் முடிக்கொண்டு அடிமையா கிடக்கும் இந்திய அரசியல்வாதிகளும் விளக்கம் அளிப்பார்களா?பல்லினம் என சொல்லும் போதே அங்கு கோட்டா முறைக்கும் கட்சியின் உறுப்பினர் அடிப்படையிலும் தொகுதி ஒதுக்கப்படுவது என்பது முறையற்று போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜசெக கட்சி ஒரு இந்தியரால் தொடங்கப்பட்டிருந்தாலும் அக்கட்சி இன்றைய சூழலில் இந்திய சமுதாயத்திற்கு அந்நியமாகி தான் வருகிறது.ஒரு இனத்தின் ஆளுமையும் இனவாத போக்கும் அக்கட்சியில் இந்தியர்களின் உரிமைக்கு தொடர்ந்து சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறது.இந்திய சமுதாயத்திற்காக போராடுகிறோம் என நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அக்கட்சியின் சார்பில் வெற்று முழக்கம் செய்துக் கொண்டிருப்பவர்கள் கட்சிக்குள் அரசியல் அடிமைகளாய் நாற்காலி மயக்கத்தில் உள்ளனர்.
பத்திரிக்கைகளில் இந்திய சமுதாயத்தின் உரிமை குறித்து அறிக்கை விடுவதோடு நமக்கான உரிமை பறிக்கப்படுவதாகவும் அதற்கு ம இ கா அம்னோவிற்கு வால் பிடிப்பதாகவும் கூறும் ஜசெக இந்திய தலைவர் சொந்தக் கட்சியில் வாய் திறக்க முடியாமல் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு அடிமைப் போக்குடன் வால் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நாடு தழுவிய நிலையில் ஜசெகவில் இந்திய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கெல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு இனத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் அதிகமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதை கடந்த இரு பொது தேர்தல்களில் வெளிப்படையாகவே உணர முடிந்தது.
குறிப்பாக சிலாங்கூரில் கோத்தா அலாம் ஷா சட்டமன்றத்தில் 12வது பொது தேர்தலில் வெற்றி பெற்ற மனோகரன் மலையாளத்திற்கு மாற்றாக கணபதி ராவிற்கு அத்தொகுதி வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மனோகரனை அத்தொகுதியில் நிலைநிறுத்தி விட்டு கண்பதி ராவிற்கு வேறு தொகுதி வழங்கியிருக்கலாம்.அவ்வாறு செய்யாமல் ஒருவரின் வாய்ப்பை பறித்து மற்றொருவருக்கு கொடுப்பது வேடிக்கையானதுதானே.
அதுபோலவே,12வது பொது தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோகரனுக்கு ஆப்பு வைத்து விட்டு அவருக்கு பதிலாய் அத்தொகுதியில் பாசீர் பெடாமர் சட்டமன்ற உறுப்பினரை 13வது பொது தேர்தலில் போட்டியிட வைத்தனர்.அதன் பின்னர் இரவு முழுவது கட்சியின் தலைமையகத்தில் கெஞ்சி கூத்தாடி சிம்மாதிரியின் வாய்ப்பை பறித்து கேமரன் மலையில் மனோகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை மறுக்கத்தான் முடியுமா?
அதுமட்டுமா? பேராக் மாநிலத்தில் தகுதிகள் இருந்தும் வாய்ப்பு வழங்கப்படாமல் சுங்கை சிப்புட் ஹலான்,பவானி (ஷாஷா),டாக்டர் ஜெயபாலன்,ஜோகூர் மாநிலத்தில் சந்திரசேகரன் என புறக்கணிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டுதான் இருக்கிறது.நாட்டின் 14வது பொது தேர்தலிலும் அதே பழைய முகங்கள் மட்டுமே இருக்கும்.இந்திய சமுதாயத்திடமிருந்து புதிய முகத்திற்கு இனவாத ஜசெகவில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
அதேவேளையில்,நடப்பில் கட்சியில் முதன்மை தலைவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருக்கும் இந்திய தலைவர்கள் கூட தங்களின் வேண்டியவர்களுக்கும் சாதி பின்னணிக்கும் மட்டுமே சிபாரிசு செய்வார்களே தவிர உண்மையான சேவையாளனுக்கும் தகுதியானவனுக்கும் மறந்தும் வாய்ப்பு கேட்டிட மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பது போல அறிக்கை விடுவதெல்லாம் வெறும் அரசியல் நாடகம் தான்.உண்மையில் ஜசெக இந்திய அரசியல்வாதிகள் கட்சியில் ஆளுமை கொண்டிருக்கும்ஒரு இனத்திடம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறார்கள்.ஜனநாயக செயல் கட்சியில் ஜனநாயகம் என்பது துளியும் இல்லாமல்,வெறும் இனவாதம் மட்டுமே மேலோங்கியுள்ளது என்பதுதான் இயல்பியல் உண்மை.
கட்சிக்குள் இந்திய சமுதாயத்தை இனவாத போக்குடன் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஜசெக பல்லினம் கட்சி என்று கூறுவதும் இந்திய சமுதாயத்திற்காக போராடுகிறோம் என மார்த்தட்டுவதெல்லாம் வெறும் "ஓட்டு"க்காக மட்டுமே என்பது மறுத்திட முடியாத உண்மை.இனவாத உச்சத்தோடு ஜனநாயக செயல் கட்சி அதன் அரசியல் முன் நகர்வினை காலகாலமாய் முன்னெடுத்து வரும் வேளையில் இந்திய சமுதாயமும் அதனை நம்பி தொடர்ந்து ஏமாந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக போராடுகிறோம் என முழங்கும் ஜசெக இந்திய தலைவர்கள் முதலில் கட்சிக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.இல்லையேல்,உரிமைக்கு போராடுகிறோம் என போலி முழக்கம் இடுவதை நிறுத்துங்கள்.நாற்காலி சுகத்திற்காக கட்சியில் அடிமைப்பட்டு கிடக்கும் உங்களால் இந்திய சமுதாயம் உரிமை பெறும் என்பதெல்லாம் வெறும் பகல் கனவு.
தேசிய முன்னணியில் அம்னோவிடம் ம இ காவை எவ்வாறு ஜசெக இந்திய தலைவர்கள் விவரிக்கிறார்களோ அதுபோலவே ஜசெகவில் இந்திய தலைவர்களும் அக்கட்சியில் அடிமைப்பட்டு நம்மினத்தின் உரிமையை விற்றும் அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத நிதர்சனம்.இவர்களின் அரசியல் நாடகத்தில் மக்களை கோமாளியாக்கி விடுகிறார்கள்.
"ஜனநாயக் செயல் கட்சி" ஜனநாயகம் இழந்து இனவாத செயல் கட்சியாய் தான் தனது அரசியல் பிழைப்பினை மேற்கொண்டு வருகிறது.அம்னோ தேசிய முன்னணியில் கோரும் அதே உரிமையை கட்சியிலும் இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என அக்கட்சியின் இந்திய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தற்போது விழிப்புணர்வோடு கோரிக்கை விட தொடங்கி விட்டனர்.


நாட்டின் 14வது பொது தேர்தலில் கடந்தக்காலங்களை காட்டிலும் இம்முறை அதிகமான இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை தற்போது அக்கட்சியினர் மத்தியில் ஆழமாய் உயிர்ப்பிக்க தொடங்கி விட்டது.தேசிய முன்னணியை எதிர்த்து உரிமைக்காக போராடுவதற்கு முன்னர் நாம் ஜனநாயக உரிமையோடு இந்திய சமுதாயத்திற்கு மதிப்பளிக்கும் கட்சியிலிருந்து நமது போராட்டத்தை தொடங்க வேண்டும் எனும் உயரிய சிந்தனை ஜசெக இந்தியர்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...