Monday, 10 April 2017

ஆசிரியர்களை மன நோயாளிகளாய் மாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளி தலைமைத்துவங்கள்


ஆசிரியர்களை மன நோயாளிகளாய் மாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளி தலைமைத்துவங்கள் – இயல்பியல் தன்மையை தொலைத்து விட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்.

   இன்றைய சூழலில் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களை உருவாக்கும் களங்களை தாண்டி யு.பி.எஸ்.ஆர் தேர்வில் “ஏ”க்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.இதில் மாணவர்கள் ஒரு புறம் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களோ பெரும் மன அழுத்தத்திற்கு தங்களை அறியாமலேயே ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் இயல்பியலை தொலைத்துக் கொண்டு தங்களின் பணியினை செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.தலைமையாசிரியர்கள் பெரும்பான்மை பள்ளிகளில் பள்ளியின் ஆசிரியர்களை மனிதர்களாய் கூட கருதுவதில்லை என்பதுதான் உண்மை.பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பள்ளியின் அடைவு நிலையை உயர்த்தவும் ஆசிரியர்களை கசக்கி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தலைமையாசிரியர்கள்.
ஆசிரியர்களின் தேவைகள் கண்டறியப்படுவதில்லை.அவர்களின் உணர்வுகளும் தேவைகளும் தமிழ்ப்பள்ளி தலைமைத்துவங்களால் குழித்தோண்டி புதைக்கப்படுவதை வெளிப்படையாகவே காண முடிகிறது.சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாற்றங்களுக்கு விண்ணப்பம் செய்யும் போதும் ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு போய்விடலாம் என புலம்பும் போதும் அஃது வெளிப்படுவதோடு ஆசிரியர்களின் வேதனைகளை விவரிக்கை வார்த்தைகள் கூட சில வேளைகளில் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பணியினை அர்ப்பணிப்புடனுடம் சந்தோசத்துடனும் தொடர்ந்த காலமெல்லாம் கடந்து விட்டது.இன்றைய சூழலில் கட்டாயத்தின் சூழலில் சூழ்நிலை கைதியாய்தான் ஆசிரியர்கள் தங்களின் பணியை செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது நிலா4யு.காம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது அதிர்ச்சியான தகவலாகும்.
சிலப்பள்ளிகளில் சக ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளகூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.ஆசிரியர்கள் ஒன்றாக உணவு எடுக்க செல்லக்கூடாது,ஆசிரியர்கள் அறையில் பேசக்கூடாது போன்ற எழுத்தப்படாத சட்டங்களும் இருப்பதும் பெரும் வேடிக்கையானது.அதிலும்,புதிதாக ஆசிரியர் துறையில் கால் பதிப்பவர்களின் நிலையோ பெரும் சோகம் நிறைந்தது.தலைமைத்துவத்தின் எழுதப்படாத நவீன அடிமைகளாய் அவர்கள் தங்களின் பணியை தொடங்குகிறார்கள்.அவர்களின் அடைவு நிலைக்காக முடிவு தலைமையாசிரியர்களின் கையில் இருப்பதால் தலைமைத்துவத்தின் கட்டளைக்கும் கட்டாயம் அடிப்பணிய வேண்டியுள்ளது.
பள்ளிக்கூடங்கள் மாணவர்களை இடைநிலைப்பள்ளி மட்டுமின்றி வாழ்க்கைக்கும் அவர்களை உருவாக்கும் மதிப்பிற்குரிய இடமாகதான் கருதப்படுகிறது.ஆனால்,இன்றை சூழலில் தமிழ்ப்பள்ளிகள் யு.பி.எஸ்.ஆர் தேர்விற்கான களமாக மட்டுமே கருதப்படுகிறது.எத்தனை “ஏ” கிடைத்தது என்பதில் காட்டும் ஆர்வத்தை அம்மாணவர்கள் தங்களை இடைநிலைப்பள்ளிக்கு நன் நிலையில் தயார்ப்படுத்திக் கொண்டார்களா என்பதில் துளியும் இல்லை.
தமிழ்ப்பள்ளியில் 7ஏ எடுத்த மாணவர்கள் கூட இடைநிலைப்பள்ளியில் தொலைந்துப்போன வரலாறு இருக்கின்றதை நாம் மறந்து விட முடியாது.இதற்கு முதன்மை காரணியம் அம்மாணவனை “ஏ”க்களுக்காக உருவாக்கினார்களே தவிர இடைநிலைப்பள்ளியின் சவாலையோ அல்லது சூழ்நிலையையோ சமாளிக்க கற்பிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.இந்த “ஏ”க்களை நோக்கி குதிரைகளை போல மாணவர்களை துரத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் தலைமைத்துவத்தின் அதிகாரத்தில் ஆசிரியர்கள் தங்களின் இயல்பியல் தன்மையை இழந்து அன்பு,புன்னகை,உட்பட தங்களின் இயல்பியல் குணங்களை தொலைத்து விட்டு மாணவர்களிடம் குதிரை மீது ஏறி சவாரி செய்யும் “ஜோக்கிகளாய்” “ஏ”க்களை நோக்கி மாணவர்களை துரத்திக் கோண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில்,அன்மைய காலமாய் தமிழ்ப்பள்ளிகளை பற்றிக்கொண்ட விநோதமான நோய் பள்ளி விடுமுறைக்கால வகுப்புக்களாகும்.பள்ளி விடுமுறைதான் ஆசிரியர் தங்களின் குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் அதிகம் நெருக்கமாய் இருக்க முடியும்.அதிலும் குடும்பத்தை விட்டு வெகுதூரமாய் பணி செய்யும் ஆசிரியர்களுக்கோ இதுதான் தங்களின் குடும்ப கடமையை செய்யவும் தகுந்த காலம்.ஆனால்,அந்த விடுமுறையிலும் வகுப்புக்களை நடத்தி அந்த ஆசிரியர்களின் வாழ்வினை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளி விடுகிறார்கள்.
யு.பி.எஸ்.ஆர் என்பது ஆறாண்டுக்கால கல்வியின் ஒரு மீள்பார்வைதான்,அஃது எந்தவொரு மாணவனின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் முடிவல்ல என்பதை ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி தலைமைத்துவமும் உணர வேண்டும்.ஒவ்வொரு நாளும் பள்ளி நேரத்தில் கற்பிக்க முடியாததையா பள்ளிக்கூடம் முடிந்தும் பள்ளி விடுமுறை காலத்திலும் கற்று தந்திட முடியும் எனும் அடிப்படை உண்மையை ஏன் தமிழ்ப்பள்ளி தலைமைத்துவங்கள் மறந்து விடுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
பள்ளியின் பாடப்புத்தகத்தில் உள்ளதும்,ஆசிரியர்களால் கற்பிக்கப்படுவதும்தான் தேர்வில் கேள்வியாய் வரப்போகிறது.இந்நிலையில்,ஒவ்வொரு நாளும் பாட நேரத்தில் முறையாகவும் மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணமும் கற்பித்து விட்டால் எந்தவொரு தயக்கமும் கொள்ளத் தேவையில்லை.பாட நேரத்தில் முறையாக மாணவர்களுக்கு புரியும் நிலையில் கற்பிக்கப்படுகிறதா என தமிழ்ப்பள்ளிகளின் தலைமைத்துவம் கண்காணித்தாலே போதுமானது என்பதுதான் நிறைவானது.
அவ்வாறு கற்பிக்கப்பட்டு விட்டால் அப்பள்ளியின் அனைத்து மாணவர்களும் தனித்துவம் மிக்க சிறந்த மாணவர்களாய் திகழ்ந்து விடுவார்கள்.ஆனால்,இங்கு முறையாக செய்ய வேண்டியதை மறந்து விட்டு மாலை வகுப்பு,இரவு வகுப்பு,விடுமுறைக்கால வகுப்பு என தொடர்ந்துக்கொண்டிருப்பது எவ்வித நன்மையையும் ஏற்படுத்தாது.மாறாய்,ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தைதான் கொடுக்கும் என்பதை தலைமையாசிரியர்கள் உணர வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான சூழலையும் சுதந்திரமான செயல்பாட்டுக்கும் வழிக்கொடுத்தால் ஆசிரியர்கள் தங்களின் கடமையினை இன்னும் ஆக்கப்பூர்வமாய் செய்வதற்கு அஃது பெரிதும் உதவிடும் என்பது மரபு.ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்துடனும் வெறுப்புடனும் பள்ளிக்கூடத்தில் நுழையும் ஆசிரியர்களால் எப்படி நன் நிலையில் மாணவர்களுக்கு போதிக்க முடியும் என்பதை தலைமையாசிரியர்கள் உணர வேண்டாமா?
நம் நாட்டின் கல்வி திட்டங்கள் விவேகமானதாய் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.இருப்பினும்,மாநில ரீதியாகவோ அல்லது மாவட்ட ரீதியாகவோ மாலை வகுப்பு,இரவு வகுப்பு அல்லது விடுமுறைக்கால வகுப்புக்களை நடத்துங்கள் என எந்தவொரு கட்டளையுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மலாய் மற்றும் சீனப்பள்ளிகளில் இந்நிலை மொத்தமாய் இல்லை என சொல்லிட முடியாது.ஆனால்,தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களை மன நோயாளிகளாய் மாற்றும் அளவிற்கு இருப்பதுதான் வேதனையானது.
இவ்வாண்டுக்கான பள்ளி விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் இன்னமும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் எத்தனை ஆசிரியர்கள் இன்னமும் பள்ளிக்கூடங்களின் வாசத்தை வேதனையோடு நுகர்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணரத்தான் முடிகிறது.அதுமட்டுமின்றி,அவர்களின் சோகமும் வெறுமையும் நிறைந்த முகங்களை காண்கையில் அவர்கள் மீது பரிதாபம்தான் வருகிறது.இம்மாதிரியா சூழலில் அவர்களா எப்படி மாணவர்களுக்கு நிறைவாய் கற்பிக்க முடியும்?
விடுமுறைக்கால வகுப்புக்களுக்கு கல்வி அமைச்சு அனுமதிக்கொடுக்க கூடாது.பள்ளி நேரத்தில் முறையாக கற்பிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய தூரநோக்கு சிந்தனையோடு ஆக்கப்பூர்வ திட்டங்களை வரையறுக்க வேண்டும் என்பதுதான் இன்றைய சூழலில் ஆசிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பு என்றால் அஃது மறுப்பதற்கில்லை.ஆசிரியர்கள் பள்ளியின் தலைமைத்துவத்திடம் சிக்கித் தவிக்கும் வேதனை ஒரு புறமிருக்க பெற்றோர்களோ தங்களின் பிள்ளைகள் “ஏ”எடுக்க வேண்டும் என ஆசிரியர்களை வாட்டி எடுத்து விடுகிறார்கள்.பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் ஒருவகையில் ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் கசக்கி எடுக்க ஒரு காரணியமாவதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் வாழ்க்கை அவர்கள் எடுக்கும் “ஏ”க்களில் இல்லை என்பதை தலைமையாசிரியர்களும் பெற்றோர்களும் மட்டுமின்றி நம் சமுதாயமும் உணர வேண்டும்.அப்போதுதான் நன் நிலையில் சிறந்த மாணவர் சமூக தமிழ்ப்பள்ளிகளில் உயிர்ப்பிக்க முடியும் என்பது எதார்த்த உண்மை.தலைமையாசிரியர்களே தங்களின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான சூழலையும் சுதந்திரமாய் செயல்படும் சூழலையும் கொடுத்துப்பாருங்கள் தங்களின் பள்ளியில் ஒவ்வொரு மாணவனும் சிறந்த மாணவனாய் உருவாகும் நிலை ஏற்படும்.
ஏ”க்களை நோக்கி குதிரை பந்தையம் போல ஓடாமல் மாணவர்களை நன் நிலைக்கு உருவாக்கும் இலக்கை உன்னதமாய் கடைபிடியுங்கள் எல்லாம் மாணவர்களும் சிறந்த மாணவர்களாய் உருவாவதோடு மட்டுமின்றி இடைநிலைப்பள்ளியிலும் தத்தம் சார்ந்த தமிழ்ப்பள்ளிகளின் நற்பெயரை உயர்த்தி பிடிப்பார்கள்.இது கற்பனையல்ல.நிஜம்.
ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மன அழுத்தம் தொடர்பிலான பரிசோதனையை மேற்கொண்டால் நிச்சயம் பத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.அன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்களில் பத்தில் நால்வர் மன அழுத்ததிற்கு ஆளாகியிருக்கும் நிலையில் ஆசிரியர்களின் நிலை நிச்சயம் அதைவிட மோசமாகத்தான் இருக்கும் என்பதை மறுத்திட முடியுமா?
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த அடைவு நிலையை எட்ட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புதான்.ஆனால்,இங்கு,அதற்கான உண்மையான தேடலையும் வழிமுறையையும் தொலைத்து விட்டு கட்டாயத்தின் அடிப்படையிலும் அதிகாரத்துவ கட்டளையிலும் அதனை நிறைவேற்ற துடிப்பது கையில் எழுதுகோளை கொடுத்துவிட்டு விரல்களை வெட்டி வீசுவதற்கு ஈடானது.தலைமையாசிரியர்களே,சற்று விவேகமாய் சிந்தித்துப் பாருங்கள் தங்களின் கீழ் பணி புரியும் ஆசிரியர்கள் சந்தோசமான சூழலில் தங்களின் பணியின் செய்கிறார்களா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
ஒருவரின் உணர்வையும்,இயல்பியல் தன்மையையும்,சுதந்திரத்தையும் பறித்து விட்டு அவர்களிடம் உங்களின் தேவைகளையும் எதிர்பார்ப்பினையும் திணிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.இது உலக கொடுங்கோள் ஆட்சிக்கு நிகரானது.சில பள்ளிகளில் தலைமையாசிரியர் ஹிட்லராகதான் இருக்கிறார்கள்.இதை சொல்வதால் நாங்கள் தமிழ்ப்பள்ளிக்கோ அல்லது தலைமையாசிரியர்களுக்கோ எதிரிகளல்ல.எங்களும் சமூக பொறுப்பு இருப்பதால்தான் அறிவார்ந்த சமூகத்தின் சிற்பிகளான அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மன நோயாளிகளாய் உருமாறி விடக்கூடாது என்பதற்காகவே இதனை மன வேதனையோடு பதிவு செய்கிறோம்.
மாற்றங்கள் மற்றவர்களிடமிருந்து தொடங்குவதை காட்டிலும் முதலில் நம்மிடமிருந்து தொடங்கட்டும்.தலைமையாசிரியர்களிடம் மாற்றம் மெய்ப்பித்தால் தனித்துவமான ஆசிரியர்கள் உயிர்ப்பிப்பார்கள்.தனித்துவமான ஆசிரியர்கள் உயிர்ப்பித்தால் நம்பிக்கையான அறிவார்ந்த நாளைய மாணவர் உலகம் உதயமாகும் என்பது மறுத்திட முடியாத உண்மை.

No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...