Thursday, 5 March 2020

2020இல் உலகின் முதன்நிலை நோயா மன அழுத்தம் உருவெடுக்கும் – உலகளாவிய நிலையில் 50 விழுக்காட்டினர் தற்கொலை!!


2020இல் உலகின் முதன்நிலை நோயா மன அழுத்தம் உருவெடுக்கும் – உலகளாவிய நிலையில் 50 விழுக்காட்டினர் தற்கொலை!!

   இன்றைய நவீனத்துவ உலகில் மனிதனின் ஆரோக்கியம் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.கருவில் வளரும் குழந்தைகூட நோயோடு பிறக்கும் கொடுரமான உலகில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் உலகை மிரட்டப் போகும் பெரும் கொடிய நோயாக மன அழுத்தம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
    உலகளாவிய நிலையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வரும் 2020இல் உலகின் முதன்மை நோயா மன அழுத்தம் உருவெடுக்கும் என நம்பப்படுகிறது.அதேவேளையில்,நடப்பில் உலகளாவிய நிலையில் தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 50 விழுக்காட்டினர் மன அழுத்தத்தால் தான் செய்துக் கொள்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியானது எனலாம்.
    மன அழுத்தம் கட்டுப்பாடற்ற நிலையை கடந்து அஃது தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் மனநோய் உட்பட பல்வேறு  பிரச்னைகளும் சிக்கல்களும்  ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறும் நிலையில் மேலும், மாரடைப்பு, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், பல நீண்ட கால வியாதி உள்ளவர்களிடமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. இதில் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவருக்கு நோய் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். குற்ற உணர்வுகள், தன்னைப்பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப்பற்றி எதிர்மறையான எண்ணங்கள், பேச்சு, செயல் மற்றும் எல்லாவற்றிலும் வேகம் குறைதல் போன்றவை மன அழுத்தநோயின் அறிகுறிகள்
    இன்றைய நவீனத்துவ உலகில் மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனைகூட  செய்து பார்க்க இயலாது.ஒரு அளவு வரை மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு வழி செய்தாலும் அஃது தொடர்ந்து அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை உருவாக்கிவிடும்.மன் அழுத்தம் என்பது இன்றுதான் புதிதாக தோன்றியதல்ல.அஃது காலகாலமாய் இருந்துக் கொண்டுதான் வந்துள்ளது.
    மக்கள் இன்று பலவிதங்களிலும் மன அழுத்தத்திற்கும் பதட்டத்திற்கும் ஆளாகிறார்கள். பழங்காலத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொள்ளும் ஒருவரை  அறியாமை,கோழை என்ற பெயரில் அழைத்ததை இன்று அழுத்தம், பதட்டம் என்ற புதிய பெயர்களில் அழைக்கிறோம்.
   மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நிர்வகிப்பதைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நீங்கள் நிர்வகிக்க வேண்டும்?நம் சிந்தனை மனவோட்டங்களை சரிவர நிர்வாகிக்க இயலாமல் போவதுதான் இதற்கு பெரும் காரணியம்.எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறீர்கள்? மன அழுத்தம் நீங்கள் செய்யும் செயலால் நேர்வதல்ல. உங்களையே சரியாக நிர்வகிக்கும் திறமை உங்களுக்கு இல்லாததால் நேர்வது. உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றை எப்படி வைத்துக் கொள்ளவேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளும் திறன் இல்லாததால் தான் மன அழுத்தமும் பதட்டமும் வருகின்றன. உங்களை நலவாழ்வில் தக்க வைத்துக் கொள்ளும் திறனோ, மன அழுத்தத்திற்குக் காரணமான சக்திநிலைகளை நிர்வகிக்கும் திறனோ உங்களிடம் இல்லை.
    அவ்வாறு இல்லாமல் போவதால் நம்மை சுற்றி நடக்கும் எதிர்மறையான  விடயங்களிலிருந்து வெலியேற முடியாமல் தவறான முடிவுகளையும் செயல்பாடுகளையும் செய்ய முனைவதோடு மட்டுமின்றி எதிலும் நாட்டம் இல்லாமல் நமக்கு நாமே தனிமை சிறை அமைத்து வாழ தொடங்கி விடுவோம்.இதனால் தூக்கம் இழந்து,சந்தோசத்தை தொலைத்து நமக்கான இயல்பு தன்மையை இழந்து நடைபிணம் போல் வாழும் சூழல் ஏற்படும்.இதில் ஏற்படும் விரக்தியின் உச்சம் தான் தற்கொலைக்கான தொடக்கமாக அமைகிறது எனலாம்.
    மனஅழுத்தம் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்திற்கு பொருந்தக்கூடிய ஒரே அளவிலானவை கிடையாது. இன்றைய காலக்கட்டத்தில், வேலை ஒதுக்கப்பட்ட பின், தங்களின் மூத்த பணியாளர்கள் மற்றும் மேலாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் நம் இலக்கை அடைய முடியாத நேரத்தில் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
    குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. உதாரணமாக, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன் அந்த வேலையை செய்கிறோம். இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன: நேர் அழுத்தம் (eustress- “positive stress”) மற்றும் சவால்கள் அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம் (distress – “negative stress”). மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.
    மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள்
  • வாழ்வியல் அழுத்தம்
தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.
  • உள்நிலை அழுத்தம்
இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.
  • சுற்றுச்சூழல் அழுத்தம்
சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.
  • களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு
அதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.
மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறுகிய (acute) மற்றும் நீண்ட கால (Chronic) பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகைகளாவும் வகைப்படுத்தலாம்
  • குறுகியகால காரணங்களால் ஏற்படும், உதாரணமாக ‘சண்டையிடு’ அல்லது ‘ஓடிவிடு’ வகை விளைவுகள், குறுகிய கால அழுத்தமாக கருதப்படுகிறது. இவை, ஆபத்துக்கள் அல்லது அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தாக்கும் போது மூளையின் பழைமையான பகுதி மற்றும் மூளையில் உள்ள சில இரசாயனங்களால் ஏற்படும் துரிதமான விளைவுகளாகும்.
  • சண்டையை அல்லது ஓட்டத்தைத் தூண்டும் காரணிகள் முடிந்த பிறகும் நடைமுறையில் இருக்கும் அல்லது தொடர்ந்த காரணிகள் நீண்டகால பாதிப்புக்களாக கருதப்படும். தொடர்ந்த அழுத்தம் ஏற்படுத்தும் வேலை, உறவுமுறை சிக்கல்கள், தனிமை, நிதிநிலை தொடர்பானக் கவலைகள் ஆகியவை இவற்றுள் சில.

·         மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்!

படப்படப்பு
 மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
           தலைவலி
   பொதுவாக டென்சன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த   ஒன்றே. ஆனால் அதிகமான அளவில் மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றை தலைவலிக்கு ஆளாகலாம்.
கூந்தல் உதிர்தல்
 நவீன உலகில், கூந்தல் உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான். எனவே அதிக வேலைப் பளுவினால் டென்சன் மற்றும் மன அழுத்தம் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய பாட்டு கேட்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது என்பனவற்றில் ஈடுபட வேண்டும்.
தற்காலிக ஞாபக மறதி
மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது, எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இவ்வாறான மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அதிகபடியான வியர்வை
 எப்போதுமே வியர்த்துக் கொண்டிருந்தாலும், அது மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறி. ஆகவே உடனே மன அழுத்தத்தை குறைப்பதற்கான முறைகளை பின்பற்ற வேண்டும்.
நரைமுடி
பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே நரைமுடியானது வந்துவிடுகிறது. எனவே இவ்வாறு இளம் வயதிலேயே நரைமுடியானது ஏற்பட்டால், உடனே அதனை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
தொடர்ந்து எரிச்சல்
 எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. சில சமயங்களில் எரிச்சல் அல்லது கோபம் வந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அதுவே எப்போதும் இருந்தால், அது பெரும் பிரச்சனை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
மாதம் மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறதென்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
முதுமை
மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது காணப்படும். மேலும் மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக இருந்தால், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுவதோடு, ஆங்காங்கு கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும்.
மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்
  • வயிற்று நோய்கள்
  • போதைக்கு அடிமையாதல்
  • ஆஸ்த்துமா
  • களைப்பு
  • படபடப்பு, தலைவலி
  • இரத்த அழுத்தம்.
  • தூக்கமின்மை.
  • வயிற்று, ஜீரண கோளாறுகள்.
  • இருதய நோய்கள்.
  • மனநிலை பாதிப்பு.
  • சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்.
மலேசியர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம்:
  மலேசியாவில் ஆய்வொன்றில் கடந்தாண்டு சுமார் 18336 பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.சுகாதார மையங்கள்,கிளினிக் ஆகியவற்றில் சுமார் 273,203 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட மனநல பரிசோதனையில் இஃது கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார துணையமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
   இளம் பருவத்தினர் போதை பழக்கங்களுக்கு அடிமையாதல், கல்வியில் பின்தங்கல், வீட்டைவிட்டு ஓடிப்போதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம். இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் மன அழுத்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை செய்வது அவசியம்
  
மலேசியாவில் பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களில் 30 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட மன அழுத்தப் பிரச்சனைக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைப் போக்க அவர்கள் ஆலோசகச் சேவையை நாடியுள்ளனர். இருப்பினும், நிலையான மாத வருமானம் பெறுவதால் அவர்களின் மன அழுத்தப் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக கூறப்படுகிறது.  
  
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் அதிகமான குழந்தைகளைக் கொண்டிருப்பதாலும் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க கடன் பெற்றிருப்பதாலும் நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதாக பொதுச் சேவைத் துறை கூறுகிறது.
   அதேவேளையில்,பள்ளி மாணவர்களிடமும் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அவர்களையும் அறியாமல் பற்றிக் கொள்கிறது.
   மேலும்,மலேசியாவில் நிலவி வரும் கல்வி கடனுதவி,வேலை இல்லாமை ஆகியவையும் இளம் தலைமுறையின் மத்தியில் மன அழுத்தத்தை அதிகரிக்க பெரும் காரணியங்களாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.அதேவேளையில்,குறைந்த வருமானம் அல்லது ஊதியம் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவையும் சாமானிய மக்களின் பொருளாதார சிக்கலாம் மன அழுத்தத்திற்கு விதைப் போடுகிறது எனலாம்.
   மன அழுத்தத்தை சமாளிக்கவும் அல்லது அதிலிருந்து விடுப்படவும் ஆரோக்கியமான வழிமுறைகள் உள்ளன.ஆனால்,நமக்குள் மாற்றம் எனும் சிந்தனை உயிர்ப்பிக்காத வரை நம்மால் அதிலிருந்து விடுப்பட முடியாது.மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வினை நோக்கி பயணிக்க வேண்டும்.மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பட்வரை தனிமைப்படுத்தாமல்,அவருக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் அரவணைக்கும் போக்கினை உடன் இருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
   மன அழுத்தத்தை முற்றாக துடைத்தொழிக்க முறையான  மருத்துவம்,ஆலோசனைகள்,தியானம்,இசை,சுற்றுலா,நடைபயிற்ச்சி,நண்பர்களோடு கலந்து பேசுவது,குடும்ப உறுப்பினர்களின் அக்கறை,அன்பு ஆகியவை பெரும் பங்காற்றும்.நமக்குள் ஏற்படும் மாற்றத்தை உடனடியாக உணர்ந்து அதனை களைய முற்பட்டால் மன அழுத்தத்தை விரட்டி அடிக்க முடியும்.நம்மிடையே தொடரும் அலட்சியம் மன் அழுத்ததிற்கு தீணி போடுவதோடு அஃது மரணத்தையும் விளைவிக்கும் என்று எச்சரிக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...