Tuesday, 24 March 2020

தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் வாழ்ந்தவர்கள்!!

தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் வாழ்ந்தவர்கள்!!


தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை.அதன் தொடர்ச்சியிலும் உண்டு.தொன்மையான தமிழ் நூற்றாண்டுகள் கடந்தும் வாழ்வதற்கு அதன் தொன்மையோடு தொடர்ச்சியும் தான் காரணியம்.அத்தகைய தொடர்ச்சியினை முன்னெடுத்தவர்களில் நம் நாட்டின் தமிழறிஞர்களும் அந்தந்த காலக்கட்டத்தில் தங்களின் பெரும் பங்கை ஆற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தோண்டு செய்தவர்ளில் பலரை இன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் நமது முந்தைய தலைமுறை அவர்களை மறந்துவிட்டது பெரும் கவலை அளிக்கிறது.தன்னோடு வாழ்ந்த ஒருவனைகூட நினைத்துப் பார்த்து அறிமுகம் செய்ய இங்கு யாரும் இல்லை.அதற்கான காலமும் ஒத்துவருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தங்களை ஈகம் செய்துக் கொண்ட மலேசிய தமிழறிஞர்களை இன்றைய தலைமுறைக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் சிறு அறிமுகத்தையாவது செய்வது சிறப்பாகும்.அவ்வகையில் தமிழர் திருநாளை ஒற்றுமை நாளாக ஒன்றாக வழிவகுத்ததோடு மட்டுமின்றி இளைஞர் மணிமன்றத்தை தோற்றுவித்து அதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் இன,மொழி உணர்ச்சியை எழ செய்த தமிழ்வேள் கோ.சாரங்கபாணியையும் நாட்டில் தமிழ் ஆய்வும் சுமேரிய நாகரிகத்தின் ஒலிவடிவம் தமிழோடு ஒத்து இருப்பதாகவும் மெய்பித்த தமிழறிஞர் முனைவர் கி.லோகநாதனையும் நாம் மறந்திடக்கூடாது.



தமிழ்வேள் கோ.சாரங்கபாணி 

தமிழ்வேள் கோ.சாரங்கபாணி என்னும் பெயர் மலேசிய தமிழர்களுக்கு புதிதல்ல.அவரது தமிழ்ப்பணி இன்றைக்கும் போற்றப்படுகிறது.தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்த அவர் மலேசியாவில் தமிழர் திருநாளை தமிழரின் ஒற்றுமைத் திருநாளாக உருவாகப் பாடுபட்டவராவார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றிய கோ.சாரங்கபாணியை தமிழர்கள் “தமிழ்வேள்” என்றும் கோ.சா என்றும் இன்றைக்கும் நினைவுக்கூறுகிறார்கள்.1955இல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சாரங்கபாணிக்கு “தமிழ்வேள்”என்னும் சிறப்பு பட்டமளித்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழிக்காகவும் இனத்திற்காகவும் சிந்தித்த இவர் இளைஞர்களை தமிழ் மொழியோடு எழுச்சி பெற வைக்க வேண்டி
 மாணவர் மணிமன்ற மலரை தொடங்கியதோடு மட்டுமின்றி தமிழ் இளைஞர் மணிமன்றத்தையும் தோற்றுவித்து தமிழுக்கு அரும் பணி செய்தார்.மாணவர் மணிமன்றத்தின் மூலம் நாட்டில் பல தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இவரை சேரும்.

இன்றைக்கும் சிங்கப்பூரில்  தமிழ் இலக்கியத்துறைக்காக இவரது நினைவாக “தமிழ்வேள்”விருது வழங்கப்பட்டு வருகிறது.இவ்விருது 1988முதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.ஆனால்,மலேசியாவில் அவர் தோற்றுவித்த தமிழ் இளைஞர் மணிமன்றம் இதுவரை அவர் பெயரில் இலக்கியத்துறை சார்ந்தவர்களுக்கு இம்மாதிரியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாதது வருத்தமானதே.

அவர் தோற்று வைத்த இளைஞர் மணிமன்றம் தொடக்ககாலத்தில் நாட்டின் முக்கிய இயக்கமாக இருந்து வந்ததை யாரும் மறுத்திடலாகாது.அவ்வியக்கத்தின் தமிழ்ப்பணி போற்றுதல்குரியது.நாடு முழுவதும் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தை முன்னெடுத்த முதன்மை இயக்கம் அது.நாளடைவில் அவ்வியக்கம் தற்போது சோர்ந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

தற்போது நீண்டகாலத்திற்கு பின்னர் புதிய தலைமைத்துவத்தை கண்டிருக்கும் இளைஞர் மணிமன்றம் புத்துயிர் பெற்று மீண்டும் கோ.சாரங்கபாணியின் இலக்கை நோக்கி எழுச்சி பெறும் என்று நம்புவோம்.இருந்த போதிலும்,பேராக் மாநிலத்தின் கோப்பெங் மணிமன்றத்தின் செயல்பாடுகள் தனித்துவமாகவும் சிறப்பாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

தமிழகத்தின் திருவாரூரில் பிறந்த கோ.சாரங்கபாணி தனது 20வது வயதில் (1924) சிங்கப்பூர் வந்தார்.அக்காலக்கட்டத்தில் அப்போதைய மலாயாவின் ஒரு பகுதிதான் சிங்கப்பூர்  என்பது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து தனித்து சுயநாடாக தன்னை பிரகடன் செய்துக் கொள்ளும் வரை (1965) அது மலேசியாவுடன் இணைந்துதான் இருந்தது.

அக்காலக்கட்டத்தில் சிங்கப்பூரின் “முன்னேற்றம்” என்னும் பத்திரிக்கையின் துணையாசிரியராகவும் பின்னர் அப்பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் கோ.சாரங்கபாணி  உயர்ந்தார்.பகுத்தறிவு சிந்தனையிலும் சீர்த்திருத்த கருத்துகளிலும் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்ட கோ.சாரங்கபாணி தனது எழுத்துகளின் மூலம் அவற்றை மக்களடையே கொண்டு சென்றார்.

தந்தை பெரியாரின் கருத்துகள் மீது ஈர்ப்புக் கொண்ட இவர் 1934இல் தாம் தொடங்கிய  “தமிழ் முரசு” வார இதழில் பெரியாரின்  கொள்கைகளையும்,முற்போக்கு கருத்துகளையும்,சாதி ஒழிப்பு மற்றும் பிராமண எதிர்ப்பு ஆகியவற்றையும் முதன்மை இலக்காக கொண்டு எழுதினார்.அக்காலக்கட்டத்தில் தனித்துவமாக இயங்கிய இப்பத்திரிக்கை மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று ஓராண்டில் தினசரி பத்திரிக்கையாக வெளிவர தொடங்கியது.
 
அதனை தொடர்ந்து “சீர்த்திருத்தம்” என்ற மாத இதழையும் , ஆங்கிலத்தில் “REFORM” என்னும் மாத இதழையும்  INDIAN DAILY MAIL” தினசரியையும் நடத்தி வந்தார்.இவரது நினைவாக கூலிம்,பாயா பெசாரில் அமைந்திருந்த பாயா பெசார் தமிழ்ப்பள்ளியை தமிழுணர்வாளர்களின் பெரும் முயற்சியால் கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டது.இது அவர் ஆற்றிய தமிழ்ப்பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தொண்டாற்றிய தமிழ்வேள் கோ.சாரங்கபாணி 1903இல் ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்து மார்ச் 16ஆம் தேதி 1974இல் தனது 71வது வயதில் இயற்கை ஏய்தினார்.


தமிழ் ஆய்வாளர் முனைவர் கி.லோகநாதன்

தமிழ் ஆய்வுகளில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டவர்களில் தனித்துவமானவராக விளங்கிடும் முனைவர் கி.லோகநாதன் சுமேரிய நாகரிகத்தின் ஒலி வடிவம் தமிழுடன் ஒத்தியிருப்பதாக விளக்கிய மலேசிய தமிழறிஞராவார்.சுமேரிய நாகரிக ஆய்வில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த அவர் அவை முதற்சங்கத் தமிழாக இருக்க வேண்டும் என்றும் தனது ஆய்வில் குறிப்பிட்டிருந்தார்.

கெடா மாநிலத்தில் 1940இல் ஆகஸ்டு 11ஆம் தேதி பிறந்த அவர் தொடக்கத்தில் மலேசிய கல்வி அமைச்சிலும் பின்னர் மலேசிய (பினாங்கு) அறிவியல் பல்கலைக்கழகத்தில்  உளவியல் துறை பேராசிரியராகவும்  பணிபுரிந்தார்.சுமேரிய நாகரிக கல்வெட்டில் “Kal-gal” என்னும் குறிப்பு கள்க,கள்ள,கள்ளன்,கள்ளர் என்னும் பொருளில் அரசனை குறிப்பிடுவதாக அமைவதாகவும் தனது ஆய்வில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் (சுமேரியா) ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும்.கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது.ஆனாலும், மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது.கிபி முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது.பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது.சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி,அக்காத் மொழி,அறமைக் மொழி போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுப்பட்டதாகும்.

(சிவாலெனின்)


No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...